செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 500 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளின் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீரின் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 4,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக உயர்த்தப்பட்டு 4,500 கன அடி திறக்கப்படுகிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
