முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வாழ்த்து தெரிவித்தனர்..!

தமிழக பொருளாதாரம் 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.88 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொழில்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு நிற்காமல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தி, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்யும்படி தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில், தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இங்கிலாந்து, ஜெர்மனி செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்பட்டுள்ளார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வாழ்த்து தெரிவித்தனர். இன்று இரவு 9 மணி அளவில் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி சென்றடைகிறார்.

ஒருவார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி பணிகள் தொடங்கி விட்டன. இதன்மூலம் 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு வெளியிடும் புள்ளி விபரங்களே சாட்சி. வாயப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வருகின்றனர். கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், அதையெல்லாம் மிஞ்ச் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின் பயண விவரம்:-

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மனியில் தி.மு.க. அயலக அணி நிர்வாகிகள், முதல்-அமைச்சரை சந்திக்கின்றனர். வருகிற 1-ந் தேதியன்று ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். 2-ந் தேதியன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொழில்முனைவோரை சந்தித்து உரையாடுகின்றார்.

3-ந் தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பார். 4-ந் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்கு பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

6-ம் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். 7-ந் தேதியன்று லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறார். செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை அவர் சென்னையை வந்தடைகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்திலும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!