நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 21-ந்தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுகள் உள்ளது. எனவே இது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
