தொகுதி மறுசீரமைப்பு எனும் சக்தி நம்முன் தொடங்கி கொண்டிருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக,தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி,வின்செண்ட் எம்.பி. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். வக்கீல் இன்பதுரை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தவெக பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த், திராவிட கழக தலைவர் வீரமணி சுமார் 53 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.