நாளை பட்ஜெட் கூட்டத் தொடர்..!

பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குறிப்பு தெரிவித்திருந்தது. இதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடரானது நாளை (ஜனவரி 31-ந்தேதி) தொடங்குகிறது.

இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பின்னர் பிப்ரவரி 13-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து .2-வது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவடையும்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை உரையாற்றுகிறார். நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். அது பிப்ரவரி 3-ந்தேதி, 4-ந்தேதி மற்றும் 6-ந்தேதி நடைபெறும். இதற்காக அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!