PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்..!

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் இன்று இரவு அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ராக்கெட்டில் ‘ஸ்பேடெக்ஸ்-ஏ’. ‘ஸ்பேடெக்ஸ்-பி’ என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.

பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சூழலில் ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயார் நிலையில் நேர் நிறுத்தப்பட்டு உள்ளது. இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணைய செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!