புதுப் புது அர்த்தங்கள்
தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் – புதுப் புது அர்த்தங்கள்.
அதில் ஒரு பாடல் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே”
இனிமையான இப்பாடலை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம், வரிகளை ஒலி வடிவில் கேட்ட படியே கடந்தும் சென்றிருப்போம்.
சரணத்தில்,
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி ,
நெஞ்சம் எனும் வீணை பாடுமே கோடி
என்று வரும் வரிகளை இப்படித் தான் உள்வாங்கி இருந்தேன்.
பல அற்புத பாடல்களைத் தந்த வாலி, கோடி என்றே இரண்டு வரிகளையும் முடித்திருப்பாரா அல்லது ஏதேனும் ஒரு வரி தோடி என்று முடிந்திருக்குமா என்ற வினாவிற்கு விடை தேட விழைந்தேன்.
விளைவு …….. இணைய தளத்தின் உதவியை நாடினேன்.
அவற்றில் ஒரு சில வலைத்தளங்கள், மேற்குறிப்பிட்டவற்றையே பாடல் வரிகளென கட்டியம் கூறின.
இருப்பினும் நிறைவு ஏற்படவில்லை.
பாடலை ஒலி வடிவில் ஓட விட்டு குறிப்பிட்ட இடம் வரும் போது, பலமுறை நிறுத்திக் கேட்டேன்.
செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி என்றே SPB அவர்கள் பாடியிருக்கிறார் என்பது உறுதியானது.
அது என்ன செஞ்சம் ……………..
யோசித்தேன் கொஞ்சம் …….
மீண்டும் இணைய தளத்தில் புகுந்தேன் தஞ்சம் ……
வீணைகளில் சரஸ்வதி வீணை, ருத்ர வீணை, சாகர வீணை மற்றும் விசித்திர வீணை என்று பல வகைகள் உண்டு.
அவற்றுள் ஒன்று தான் செஞ்சம் எனும் ஒரு வகை.
இது சோக கீதங்களை எழுப்புவதற்கென்றே செய்யப்பட்ட இசைக் கருவி.
சோகமான தோடி ராகத்தை கூட நாம் இவ்வீணையில் வாசித்தால், அது மகிழ்ச்சியான ஒலியையே எழுப்பும்.
செஞ்சம் என்று சோகமே உருவான கணவனுக்கு அருகில், தோடி என்ற மனைவி இருந்தால் அது மகிழ்ச்சியையே வெளிப்படுத்தும் என சொல்லும் கவிஞரின் உவமையை , கற்பனையின் உச்சம் என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அதே நேரம், எனக்கோர் ஐயம்.
(கதையின் படி) தனக்கே உடையவன் என்று கருதும் மனைவி, நிறைய தொல்லைகள் அளித்தாலும் நாயகன் தான் ஒரு நல்ல பாடகன் என்று நிருபிப்பேன் என்று
சொல்ல வருகிறாரா…….

அட இப்படியா இந்த வார்த்தைகள்
என ஆச்சரியத்தை அளித்துள்ள பதிவு.
நன்றி சார்.