தை அமாவாசையும் முன்னோர் வழிபாடும்

 தை அமாவாசையும் முன்னோர் வழிபாடும்

ஒரு உண்மையான மகன் அமாவாசைதோறும் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யவேண்டும். அமாவாசையன்றுதான் எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால் அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் நம் முன்னோர்கள் தங்கள் உறவுகளைப் பார்ப்பதற்காக பூலோகத்துக்கு வருவார்கள். அவர்கள் மேலோகத்திலிருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. அதனால் அவர்களுக்கு அன்று தர்ப்பணம் கொடுக்கிறோம்.

நம் முன்னோர்கள் திரும்பவும் மேலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அவர்களை வழியனுப்பும் விதமாக அவர்களுக்கு இன்று திருப்தியாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

தை அமாவாசை (21-1-2023) சனிக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு தொடங்கி விடுகிறது. தர்ப்பணம் செய்யும் நாளன்று காலையில் சாப்பிடக்கூடாது. அன்று அதிகாலையில் புனித நீராடி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யலாம். மதியம் சாப்பிடலாம். இரவு சாதம் சாப்பிடக்கூடாது. யாருக்கு திதி கொடுக்கவேண்டுமோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தைக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழியில் உள்ளவர்களுக்கு, பின் தாய் வழியில் உள்ளவர்களுக்குச் செய்தல் வேண்டும்.

சூரியன் பிதுர்காரகன், சந்திரன் மாதூர்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகர ராசியில், கர்மகாரகன் சனியின் வீட்டில் சந்திரனுடன் சூரியன் சேரும் நாள் மிகவும் விசேஷமான தை அமாவாசையாகும. அதிலும் உத்திராயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பாகும்.

சனிக்கிழமையன்று சூரியோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். அன்றைய தினம் உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் காந்தசக்தி ஏற்படுகிறது.

சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். சூரியகலையும், சந்திரகலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். அப்போது கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனர்.

அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அநேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை அன்று நடத்துகின்றனர்.  அதனால்தான் முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக் கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தர்ப்பணம், செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்ன தானம் செய்யலாம்.

அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை
குலதெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின்போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினர் தொடர்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ, காய்கறிகளையோ புல், பூண்டுகளையோ தொடக் கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை அமாவாசையில் அன்னதானம் செய்யலாம்.

தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...