வரலாற்றில் இன்று – 25.01.2021 தேசிய வாக்காளர் தினம்

இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை 2011ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும், ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய சுற்றுலா தினம்

இந்திய சுற்றுலா தினம் ஜனவரி 25ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வு, கலாச்சார பாரம்பரியம் சார்ந்த தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் மாசு அடையாமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சுற்றுலா என்பது பல்வேறு கலாச்சாரம், மதப் பழக்கங்கள் சார்ந்தவர்களை ஒன்று சேர்ப்பதோடு, அனைவரிடத்திலும் புரிதலை ஏற்படுத்துகிறது.

பித்துக்குளி முருகதாஸ்

பக்தி பாடல்கள் பாடுவதில் தனக்கென்று தனி முத்திரையை பதித்த பித்துக்குளி முருகதாஸ் 1920ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கோவையில் பிறந்தார். இவரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியன்.

பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். பின்னாளில், இவருக்கு உபதேசம் அளித்து, முருகதாஸ் என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பிரம்மானந்த பரதேசியார் தனக்கு வைத்த பித்துக்குளி என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, பித்துக்குளி முருகதாஸ் ஆனார்.

1947ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கிய பித்துக்குளி முருகதாஸ், 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடியிருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.

கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த பாடகரும், முருக பக்தருமான இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1881ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியை ஆரம்பித்தனர்.

1924ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமொனிக்ஸ் என்ற இடத்தில் ஆரம்பமானது. 1971ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!