மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா!

மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா! மயானக் கொள்ளை என்றால் என்ன… உருவான காரணம்! முழு விவரங்கள்

மயானத்தில் அம்மனின் உருவம் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் காட்டேரி வேடமிட்டும், மண்டை ஓடு மாலைகள் அணிந்தும் ஆக்ரோஷமாகக் காணப்படுவார்கள்.

மாசி மாதத்தில் கொண்டாடப்படும் உற்சவங்களில், ஆடி மாதம் அம்மனுக்கு கொண்டாடும் விழா போலவே, உற்சாகமாக, பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் உற்சவம் தான் மயான கொள்ளை. தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றில், மாசி அமாவாசை அன்று நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஆதிசக்தியின் சொரூபமாக விளங்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ இவ்விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மயான கொள்ளை ஒவ்வொரு ஆண்டும் மாசி அமாவாசை அன்று நடக்கும். மயானக் கொள்ளை என்றால் என்ன, இதன் மகத்துவம் என்ன என்று பார்க்கலாம்.

பிரம்மனின் ஆணவமும் சிவனின் சாபமும்
மயானக் கொள்ளை நடப்பதற்கு பின்னால் சுவாரஸ்யமான புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில், பிரம்மன் ஐந்தாவது தலையுடன் அகந்தையுடன் திகழ்ந்தார். அவரின் ஆணவத்தை அடக்க, சிவபெருமான் காலபைரவர் உருவம் கொண்டு பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார்.
இதனால் சிவபெருமானுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. மேலும், பிரம்மன் அளித்த சாபத்தினால், வெட்டப்பட்ட அந்த மண்டை ஓடு (கபாலம்) சிவனின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டது.
தன் கணவரின் தலை வெட்டப்பட்டதை அறிந்த சரஸ்வதி தேவி கோபமடைந்து பார்வதி தேவிக்கு சாபமிட்டார்.

அதன் விளைவாக, பார்வதி தேவி சிவனைப் பிரிந்து பூலோகம் வந்து, காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, இறுதியில் மலையனூர் காட்டில் ஒரு பாம்பு புற்றில் வாழ்ந்து வந்தார்.

பார்வதி தேவி மலையனூரில் இருப்பதை அறிந்து சிவபெருமான் அங்கு வந்தார்.

சிவனின் கையில் இருக்கும் கபாலத்தை அகற்ற மகாலட்சுமி ஒரு யோசனை கூறினார். அதன்படி, பார்வதி தேவி சுவையான உணவைச் சமைத்து சிவனின் கையில் கொடுத்தார். முதல் இருமுறை கொடுத்த உணவைக் கபாலம் தின்றுவிட்டது. மூன்றாவது முறை உணவைக் கொடுக்கும்போது, பார்வதி தேவி வேண்டும் என்றே கீழே சிதறும்படிச் செய்தார். கீழே விழுந்த உணவின் ருசிக்கு ஆசைப்பட்டு, கபாலம் சிவனின் கையை விட்டு இறங்கித் தரைக்கு வந்தது. அந்த நொடியே பார்வதி தேவி உக்கிரமான அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்து, தன் காலால் அந்த மண்டை ஓட்டை மிதித்து பூமிக்குள் அழுத்தினாள்.
இதன் மூலம் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இந்த வெற்றியைத் தான் ‘மயானக் கொள்ளை’ என நாம் கொண்டாடுகிறோம்.
2026 மயானக் கொள்ளை எப்போது வருகிறது
மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள், அதாவது மாசி மாத அமாவாசை அன்று இவ்விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு மயானக் கொள்ளை, பிப்ரவரி 17, செவ்வாய் அன்று வருகிறது.
மயானக் கொள்ளை அன்று என்ன நடக்கும்
மயானத்தில் அம்மனின் உருவம் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் காட்டேரி வேடமிட்டும், மண்டை ஓடு மாலைகள் அணிந்தும் ஆக்ரோஷமாகக் காணப்படுவார்கள்.இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டால், தீய சக்திகள் விலகும், தீராத நோய்கள் மற்றும் கடுமையான தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மயானக் கொள்ளை என்பது வெறும் தோஷம் நீக்கும் நிகழ்வு மட்டுமல்ல; அது அனைத்து உயிர்களுக்கும் அன்னை உணவிடும் நிகழ்வு.
அன்று மயானத்தில் இறைக்கப்படும் தானியங்களும் உணவுகளும் அங்காளியால் ஆவிகளுக்கும், அலைந்து திரியும் ஆன்மாக்களுக்கும் அளிக்கப்படும் ‘பலி’ அல்லது ‘விருந்து’ எனக் கருதப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அப்பால், முக்திக்காகக் காத்திருக்கும் ஆன்மாக்களுக்குத் தாயாக நின்று பரமேஸ்வரி கருணை காட்டும் நிகழ்வே மயானக் கொள்ளையாகும்.

ஊஞ்சல் உற்சவம்: அங்காள பரமேஸ்வரியின் தாலாட்டு
மயானக் கொள்ளை முடிந்து, அன்னை புற்று வடிவில் சாந்தமடைந்த பிறகு நடைபெறும் இந்த உற்சவம் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நள்ளிரவில் இந்த நிகழ்வு நடைபெறும்.
அமாவாசை அன்று இரவு சுமார் 11:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று, “அங்காளி… தாயே…” என்று முழக்கமிடுவது அந்த இடத்தையே பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
பரமேஸ்வரி ஊஞ்சலில் ஆடும்போது, அங்கிருக்கும் ஓதுவார்கள் மற்றும் பூசாரிகள் அன்னையைப் புகழ்ந்து தாலாட்டுப் பாடல்களைப் பாடுவார்கள். அன்னையின் உக்கிரத்தைத் தணித்து, அவளைக் குளிரூட்டும் விதமாக இந்த ஊஞ்சல் சேவை அமைகிறது.
இந்த ஊஞ்சல் உற்சவத்தைக் காண்பவர்களுக்கு:
மன அமைதி கிடைக்கும்.
திருமணத் தடைகள் நீங்கும்.
குழந்தை பாக்கியம் கிட்டும்.
செய்வினை மற்றும் தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
மயானக் கொள்ளை அன்று அங்காள பரமேஸ்வரி வாரி இறைக்கும் (சூரையிடும்) தானியங்களை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு சேகரிப்பார்கள். அந்தத் தானியங்களைத் தங்கள் வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பதும், வயல்களில் தூவினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!