சபரிமலை அய்யப்பன் கோவிலில் 36½ லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் சாமி தரிசனம் செய்கின்றனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், மண்டல பூஜை சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 36½ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந் தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் ஆன்லைன் முன்பதிவின்படி 30 லட்சத்து 56 ஆயிரத்து 871 பக்தர்களும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 667 பக்தர்களும், சத்ரம் புல்மேடு மற்றும் கரிமலை வழியாக வந்த 1 லட்சத்து 88 ஆயிரத்து 720 பக்தர்களும் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டு மண்டல சீசன் முடிவடைந்தபோது 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து இருந்தனர். அதாவது கடந்த சீசனை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 502 பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!