சென்னையில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்..!

தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக அழைப்புகள் வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். தலைநகர் சென்னையிலும் நேற்று இரவு இடைவிடாது பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை 6 மணி வரை 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன், பெருங்குடி மண்டலத்தில் 6.03 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 6,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகள் தரம்பிரிக்கப்பட்டு கும்மிடிபூண்டி, பெங்குடி, கொடுங்கயூர் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இதைபோல தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கத்தை விட 61% அழைப்புகள் கூடுதலாக வந்ததாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபாவளி தினமான நேற்று மாலை 6 மணி வரை மட்டும் 4,635 அழைப்புகள் வந்ததாகவும், அதில் தீக்காயங்களுக்காக 135 அழைப்புகள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!