“சென்னையில் மேகவெடிப்பா..?” – வெளியான முக்கிய தகவல்..!

காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (31-08-2025) மற்றும் நாளை (1-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் நாளை மறுநாள் (2-09-2025) முதல் 05-09-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ, விம்கோநகரில் 23 செ.மீ, கொரட்டூரில் 18 செ.மீ, கத்திவாக்கத்தில் 13 செ.மீ மழை பதிவானது.

இந்நிலையில் சென்னையில் இந்தாண்டில் முதல்முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், “இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேக வெடிப்பு. சென்னையின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது” என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மற்றொரு சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில், “சென்னையில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தீவிரமான மேகவெடிப்பு போன்ற மழை பெய்தது. 2025ஆம் ஆண்டின் முதல் தீவிர வானிலை நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. இன்று இரவும் (31-08-2025) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் நேற்று பெய்ததை விட தீவிரம் குறைவாகவே இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!