வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
”பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து, தேர்தல் கமிஷன் ஓட்டு களை திருடுகிறது. இதற்கு உதாரணமாக மஹாராஷ்டிராவில் முறைகேடு இருப்பதை கண்டறிந்தோம். வெற்றி வாய்ப்பு தேர்தல் முடிவுகள் திட்டமிடப்படுகின்றன. இதற்கு, லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதி முடிவுகளே சாட்சி. இது, அரசியல் அமைப்புக்கு எதிரான குற்றம். இதில் நீதித் துறை தலையிட வேண்டும்,” என, நேற்று சில புள்ளி விபர ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்நிலையில் இன்று கர்நாடகத்தில் பெங்களூருவில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்.எம்.பி., ராகுல் தலைமை தாங்குகிறார். அவருடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பின்னர் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து புகார் மனு கொடுக்கிறார்.
