ஜூன் 2 வது வாரத்தில் ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் திறக்க நடவடிக்கை..!

ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகரின் பிராட்வே பஸ் நிலையம் பழமையானது. தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிராட்வே பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. பின்னர் அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.

பிராட்வே பஸ் நிலையத்தில் 168 கடைகள் செயல்பட்டு வந்தன. அங்கு 45 குடும்பங்களும் வசித்து வந்தன. கடைகளையும், குடும்பங்களையும் மாநகராட்சி சார்பில் இடமாற்றம் செய்யப்பட்டன.

பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெறும் வரை, ராயபுரம் ரெயில் நிலையம் அருகே, இப்ராஹிம் சாலையில் உள்ள, சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 3.45 பரப்பளவு கொண்ட இடத்தில் 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த இடத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.86 கோடி வாடகையாக சென்னை துறைமுகம் நிர்ணயித்துள்ளது.

அதனை தொடர்ந்து ராயபுரம் இப்ராஹிம் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, அங்கு நிழற்குடை, பயணிகள் அமர்விடம், கழிப்பறை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஜூன் 2 வது வாரத்தில் ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!