முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு காலத்துக்கு தடை தமிழ்நாடு அரசின் உணவுத் துறை சார்பில் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது
முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ். இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது. மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுப் பொருட்களில் இந்த மயோனைஸ் வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
நவீன இளைய தலைமுறையினர் சாப்பிடும் ஸ்னாக்ஸோடு சேர்த்து தவறாமல் மயோனைஸும் பகிரப்படுகிறது. மயோனைஸை சாப்பிடுவதற்கென்றே குறிப்பிட்ட உணவுப் பண்டத்தை வாங்கிச் சுவைப்போரும் உண்டும். சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸை தடை செய்யுமாறு தெலங்கானா அரசுக்கு உணவு பாதுகாப்புத் துறை பரிசீலித்தது. இதனைத் தொடர்ந்து முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைசுக்கு ஓராண்டு காலம் தடை விதித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8 ஆம் தேதியிலிருந்து ஓராண்டுக்கு முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மயோனைஸை உற்பத்தி செய்யவும், சேமித்துவைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா, தந்தூரி போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் மயோனைஸில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.