பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை..!

ராமேசுவரம் – தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேசுவரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் ரெயில் பாலம் கட்டப்பட்டது. இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரெயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்ற பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில், தன்னுடைய உறுதித்தன்மையை படிப்படியாக இழக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, ரெயில்கள் இயக்கிப் பார்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு திறந்து வைக்கிறார். அவரது வருகையையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திரமோடி மண்டபம் வருகிறார்.

காலை 11.45 மணிக்கு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வருகிறார். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் செல்ல இருக்கின்றது. தொடர்ந்து, தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் ரெயில் பாலத்தை கடந்து செல்ல இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையின் கண்காணிப்பு டிரோன்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவை அனைத்தையும் பார்வையிடும் பிரதமர் நரேந்திரமோடி, பகல் 12.25 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.

ராமநவமி நாளில் அங்கு வரும் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்மனையும் வழிபடும் பிரதமர் நரேந்திரமோடி, சாமி தரிசனத்தை முடித்துவிட்டு மதியம் 1.20 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு ரோடு ஷோ மூலம் அழைத்துவரப்படுகிறார். விழாவில் சிறப்புரை ஆற்றும் பிரதமர் நரேந்திரமோடி, ராமேசுவரம் – தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

மேலும், ரூ.7,750 கோடி மதிப்பீட்டில் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை, விழுப்புரம் – புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சாவூர் பகுதிகளுக்கான 4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 1 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதியம் 2.45 மணிக்கு காரில் மண்டபம் புறப்படும் பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!