ஹாரர் திரில்லர் படமான ‘சப்தம்’ நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து ‘சப்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன். இந்த படத்தில் ஆதி, ‘ரூபன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மாயா மாயா’ சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தர தாமதம் ஏற்பட்டதால் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திட்டமிட்டமிபடி பிப்ரவரி 28ம் தேதி வெளியாகாமல், மார்ச் 1-ந்தேதி காலை முதல் திரையரங்குகளில் வெளியானது.
‘சப்தம்’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூல் செய்தது. இப்படம் 3 நாட்களில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் ‘சப்தம்’ படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ஒலி தொடர்பான பேய் படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறை. இயக்குநர் அறிவழகனின் தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பாக உள்ளது. இடைவேளைக்கு முந்தைய காட்சியும், ஒலியும் எதிர்பாராத ஒன்று. ஆதியின் நடிப்பும், தமனின் இசையும் அற்புதமாக உள்ளது. படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்”என பதிவிட்டிருக்கிறார்.