சென்னையில் 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், தாம்பரம்-செங்கல்பட்டு, அரக்கோணம் -கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் நாள்தோறும் 600க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் 10 லட்சம் பயணிகள் தினசரி பயணிக்கின்றனர்.
இந்த வழித்தடங்களில் பயணிகள் தேவை அடிப்படையில், அவ்வப்போது புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன்படி, தற்போது, 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு முற்பகல் 11.15 மணிக்கு ஒரு மின்சார ரயில் (43013), ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 5.25 மணிக்கு ஒரு மின்சார ரெயில் (43006), சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.35 மணிக்கு ஒரு மின்சார ரெயில் (42035), கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் இடையே காலை 9.10 மணிக்கு ஒரு ரெயில் (42014) ஆகிய 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரெயில்களின் சேவைகள் இன்று (திங்கள்கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.