டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்..!

டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது.

இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்து உள்ளனர். ரெயில்வே நிலையத்தில் உள்ள கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அலறியடித்தபடி ஓடினர்.

ரெயில் பயணிகளில் சிலர் கூறும்போது, நான் ரெயிலுக்காக காத்திருந்தேன். அப்போது, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை உணர்ந்தேன். ரெயில் நிலையத்திற்கு கீழே வேறு ஏதேனும் ரெயில் செல்கிறதோ என்று அச்சமடைந்து விட்டேன் என்றார்.

வேறொருவர் கூறும்போது, நிலநடுக்கம் வலிமையாக இருந்தது. இதுபோன்று இதற்கு முன்பு நான் உணர்ந்ததில்லை. முழு கட்டிடமும் குலுங்கியது என கூறியுள்ளார். எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *