ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக அவரது மகன் ராம் சரண் இருந்து வருகிறார். ராம் சரண் ராஜமவுளி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர்.
ராம் சரண் உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதேபோல, சிரஞ்சீவியின் மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கு தலா இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ‘பிரம்மானந்தம்’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது, “எனது வீட்டில் எல்லோரும் பெண்களாக இருப்பதால், சில சமயங்களில் பெண்கள் விடுதி காப்பாளராக இருப்பது போல் நான் உணர்கிறேன். நான் வீட்டில் இருக்கும்போது, என்னைச் சுற்றி என் பேத்திகள் இருப்பது போல் என்னால் உணர முடியவில்லை. வாரிசாக ஆண் குழந்தை வேண்டும். ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்குமோ என்று பயமாக இருக்கிறது”. தனது பரம்பரை தொடர, இந்த முறையாவது ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று மகன் ராம் சரணை தொடர்ந்து கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். சிரஞ்சீவியின் இந்த பேச்சால் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.