மகளிர் டி20 உலகக் கோப்பை:

கடைசிப் பந்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!

  12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள். 

     ஆனால், பூணம் யாதவின் 19-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தார் அமேலியா கெர். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டு பவுண்டரிகள் அடித்து கடைசிப் பந்தில் நியூஸிலாந்து வெற்றி பெற 5 ரன்கள் தேவை என்கிற நிலைமை உருவானது. சிக்ஸர் அடிக்க முடியாவிட்டாலும் பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்கிற நிலையில் நியூஸி. வீராங்கனை ஜென்சன் ரன் அவுட் ஆனதால் இந்தியா – நியூஸிலாந்து இடையிலான மகளிர் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பரபரப்பான முறையில் முடிந்தது. இந்திய அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

   மந்தனா 11 ரன்களில் ஆட்டமிழக்க, வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 16 வயது ஷஃபாலி. அன்னா பீட்டர்சன் வீசிய 5-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். 6 ஓவர்களில் இந்திய அணி 49/1 ரன்கள் எடுத்தது. ஆரம்பம் நன்றாக அமைந்தாலும் நடு ஓவர்களில் இந்திய அணி மோசமாக விளையாடியது. தானியா பாட்டியா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் ரன்கள் எடுக்கும் வேகமும் குறைந்தது.

   ரோட்ரிகஸ் 10 ரன்களிலும் கெளர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷஃபாலி. வேதா கிருஷ்ணமூர்த்தி 6 ரன்களிலும் தீப்தி சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். ராதா யாதவ் 14 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ரன் அவுட் மூலம் வெளியேறினார். 

ந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

    முதல் 6 ஒவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திறமையாகப் பந்துவீசியதால் நியூஸி. அணியால் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள்தான் எடுக்க முடிந்தன. எனினும் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேடி கிரீனும் கேடி மார்டினும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முயன்றார்கள். 14 ஓவர்கள் வரை இருவரையும் பிரிக்க முடியாமல் போனது. அப்போது நியூஸி. அணி வெற்றி பெற 36 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் கிரீன் 24 ரன்களிலும் மார்டின் 25 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் கை ஓங்கியது. எனினும் 19-வது ஓவரில் 18 ரன்கள் எடுத்து வெற்றிக்குத் திட்டமிட்டது நியூஸி. அணி.

ஆனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. கெர் 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த உலகக் கோப்பையில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!