மறந்தும் கூட அமாவாசை நாளில் இந்த தவறுகளை…

 மறந்தும் கூட அமாவாசை நாளில் இந்த தவறுகளை…

ஆடி அமாவாசை… மறந்தும் கூட அமாவாசை நாளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாள். இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் எந்த அமாவாசை நாளினை தர்ப்பணம் தர நாம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மூன்று அமாவாசைகள்:

ஆறு மாதம் கொண்டது ஒரு அயனம். இரண்டு அயனம் கொண்டது நமக்கு ஒரு வருடம். அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்தராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை… புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்

வீடு தேடி வரும் முன்னோர்கள்: ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முன்னோர்களுக்கு வரவேற்பு:

நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளய அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

பித்ரு தர்ப்பணம்:

ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களையும் யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

முன்னோர்கள் மகிழ்ச்சி:

முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.

எள் தானம்:

எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:’ என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. பித்ருசாப நிவர்த்தி: அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அன்னதானம்:

நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்

செய்யக்கூடாதவை:

நம்முடைய வீட்டிற்கு வரப்போகும் விருந்தினர்களை வரவேற்பது போல வீட்டினை சுத்தம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அமாவாசை நாளில் மறந்தும் நாம் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அமாவாசை நாளில் அசைவம் சமைக்கக்கூடாது. காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைக்க வேண்டும். 2 அமாவாசை: இந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி அதாவது ஆடி 1ஆம் தேதி ஒரு அமாவாசையும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடி-31ல் ஒரு அமாவாசையும் வருகிறது. பஞ்சாங்கத்தில் இரண்டு அமாவாசையுமே ஆடி அமாவாசை என்றுதான் போட்டிருக்கிறார்கள் எனவே பலருக்கும் குழப்பம் வருகிறது. அதில் ஆகஸ்டு 16 ஆம் தேதி வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரியதாகும். அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது. எனவே விரதம் இருப்பது, முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுப்பது, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், தேவிபட்டிணம், புண்ணிய தலங்களில் புனித நீராட ஆடி- 31 புதன்கிழமையில் வரும் அமாவாசையே உகந்தது.

ஆகஸ்ட் 16 ஆடி அமாவாசை:

இரண்டு திதி வந்தால் அந்த மாதத்தில் நாம் இரண்டாவதாக வருகின்ற திதி எதுவோ அதனைக் கொள்வது தான் முறை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த முறை ஆடிமாதத்திலே வருகின்ற இரண்டு அமாவாசைகளில் இரண்டாவதாக வருகின்ற அமாவாசையே ஆடி அமாவாசை ஆகும் அதுவே விரதநாளும் ஆகும். அன்றே விரதமிருந்து தர்ப்பணங்கள் செய்வதற்குரிய நாளுமாகும். எனவே 16.08.2023 அன்று இரண்டாவதாக வருகின்ற அமாவாசையினை விரத நாளாகக் கொள்வது தான் சரியும் சாஸ்திர பூர்வமானதுமாகும். எனவே ஆடி அமாவாசையில் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். அன்றைய தினம் அன்னதானம் செய்தால் நம்முடைய முன்னோர்களின் ஆசி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்த தர்ப்பண வழிபாட்டால், பித்ருக்களின் பாவங்கள் தொலையும். புண்ணியங்கள் பெருகும். பல தலைமுறையும் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...