சனி தோஷம் நீங்கி சகல நலன்களையும் பெற வாயு புத்திரனை வழிபடுங்கள்.

சனி தோஷம் நீங்கி சகல நலன்களையும் பெற வாயு புத்திரனை வழிபடுங்கள்.

நவகிரகங்களில் வலிமையான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர்.

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் தருவார். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு காலக்கட்டம் வரும். ஏழரை சனி மற்றும் சனி மஹாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை சில முறை ஏற்படுத்தும் காலங்களாகும்.

ஒருவர் பிறந்த ஜாதகக் கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொறுத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத் தரும்.

ஒரு மனிதனுக்கு ஜாதகப்படி சனி பகவானின் தாக்கம் இருக்கும் போது, அவர் அனுமனை வணங்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அனுமன் ‘சங்கட மோச்சன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஏனென்றால் அவர் தன் பக்தர்களை அனைத்து விதமான சங்கடங்களிலிருந்தும் விடுவிக்கிறார். சங்கடம் என்பதன் மொழியாக்கம், தொந்தரவுகள் அல்லது பிரச்சனைகள் என்பதாகும்.

அனுமன் குழந்தையாக இருந்த போது சூரியனை சுவையானப் பழம் என்றுத் தவறாகக் கருதி, பிடித்து சாப்பிட முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சூரிய பகவான், தேவர்களின் தலைவனான இந்திரனை அணுகினார். இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தால் குழந்தை அனுமனைத் தாக்கினார். இதனால் குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயமே அனுமன் என்ற பெயருக்குப் பின்னால் உள்ள காரணமாகும்.

அனுமன் மிகுந்த ஆற்றல் மிக்கவராக இருந்தாலும், எப்பொழுதும் பணிவானவர். அவர் சூரிய பகவானிடம் தன்னை மாணவராக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினார்.

அதற்கு சூரிய பகவானோ, தான் நாள் முழுவதும் வானத்தில் பயணிக்க வேண்டி இருப்பதால், எப்பொழுதும் ஓய்வின்றி இருப்பதாக கூறினார்.

அதற்கு தீர்வாக, அனுமன் சூரியன் பகவானின் தேரின் முன் பக்கம் அமர்ந்து, அது வானெங்கும் பறக்கும் போது, தானும் உடன் பயணிக்கத் தொடங்கினார். அவர் சூரிய பகவானுக்கு முதுகு புறத்தைக் காட்டியபடி பயணித்தார். மேலும் இறைவன் சூரியனிடமிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டார்.

அனுமனின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை?

அனுமன் தனது கல்வியைக் கற்று முடித்த பிறகு, குருவான சூரிய பகவானிடம், குருதட்சணையாக அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டார்.

ஆனால் அனுமன் வற்புறுத்தவே, பின்னர் சூரிய பகவான் தன் மகனான சனி தேவனின் கர்வத்தை அழிக்குமாறு அனுமனைக் கேட்டுக் கொண்டார்.

அனுமன் சனி லோகத்திற்கு சென்று, சனி தேவனைப் பார்த்து அவரது வழிகளைத் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சனி தேவனோ கோபம் கொண்டு, அனுமனின் தோளின் மீது தாவி ஏறி, தனது முழு பலத்தையும் கொண்டு, அனுமனைத் தாக்க முயற்சித்தார்.

அனுமன் தனது உருவத்தை மிகப் பெரியதாக அதிகரித்துக் கொள்ளத் தொடங்கினார். அவர் மிகப்பெரிய உருவமாக ஆன பிறகு, தோளிலிருந்த சனி பகவான் மேற்கூரையில் இடித்துக் கொண்டு நசுங்கினார். அது அவருக்கு அளவில்லாத வலியை ஏற்படுத்தியது. யாராலும் தப்பிக்க முடியாததாக கருதப்பட்ட சனி தேவனின் கர்வம் உடைந்தது.

அவர் அனுமனிடம் மன்னிப்புக் கோரி, தனது சக்திகளால் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை என்ற வரத்தை அளித்தார்.

ஆஞ்சநேயர் வழிபாடு :

பக்தியில் சிறந்தது அனுமன் பக்தி என்பார்கள். ஸ்ரீராமபிரான் மீது, அத்தனை அன்பும், பக்தியும் கொண்டிருந்தவர். அதனால்தான் பல ஆலயங்களிலும் கைகூப்பிய நிலையில் சன்னதி கொண்டிருக்கும் அனுமனைத் தரிசிக்கிறோம்.

ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாம வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.

அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் கஷ்டங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

துளசி மாலையும், வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. எனவே, சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலையை சாற்றி அனுமன் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கும், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.

அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள் ஆகும். வெற்றி கிடைத்திட இவருக்கு திராட்சைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.

அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவிக்க அனுமனின் அருளைப் பெறலாம்.

தொடங்கிய வேலைகளில் தடை நீங்க, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!