சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சி யான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, புதிய வரவான தமிழக வெற்றிக்கழகம் என 4 முனை போட்டி நிலவியது.

இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவானது.
இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையி னர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். பணம் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவை அடுத்து, தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு திரும்பப் பெறப்பட்டன. அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை என்றும் தமிழகத்தில் மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவம், போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
