மார்ச் முதல் வாரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறது.

அதன்படி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 2 நாட்களாக சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. 2-வது நாளான நேற்று கூட்டத்தில் குழுவின் தலைவர் கனிமொழி மற்றும் இதர உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேஷன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், அனைத்து தலித் கிறிஸ்தவர்கள் சமூக நீதிக்கான கூட்டமைப்பு, தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் கோரிக்கைகளையும், மனுக்களையும் அளித்தனர்.

அதன்பின் கனிமொழி எம்பி பேசுகையில், ‘‘மக்களின் கருத்துகளை கேட்டறிந்துதான் இந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில் மக்களுடன் தொடர்ந்துபயணிக்கும் சமூக அமைப்புகளின் ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். உங்கள் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு நிச்சயமாக ஏற்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொருளாளர் ஏ.இப்ராஹிம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். அப்போது முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துதல். கல்விக் கடன், தொழிற் கடனுதவியை வட்டியின்றி வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியமனுவை தேர்தல் அறிக்கையில் சேர்க்கக் கோரி கனிமொழியிடம் வழங்கினர்.

அவற்றை பரிசீலித்து அறிக்கையில் சேர்ப்பதாக குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை தயாரிக்கும் பணிகளை முடித்துமார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனகட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!