திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கூடுதல் ஏற்பாடுகள் – விஐபி தரிசனம் ரத்து..!

சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது என்றாலும், சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் (மே) 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.01 மணி முதல் மறுநாள் இரவு 10.25 மணி வரை சித்ரா பவுர்ணமி கிரிவலம் வருகிறது.

வழக்கத்தைவிட சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

அந்த வகையில், 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. மேலும், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதை பகுதியில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும், குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றன.

அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், முறையான தரமான உணவுகள் வழங்க வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் போலி நெய் தீபம் விற்பனை செய்யவும், கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!