சென்னையில் விமான சேவை பாதிப்பு..!
சென்னையில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி சூழ்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 7 மணி ஆகியும் பனிப் பொழிவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். மேலும் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழுவு உள்ளதால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.