திருச்சி மாநகரில் கள்ளத் துப்பாக்கி

திருச்சி மாநகரில் கள்ளத் துப்பாக்கி 


திருச்சி மாநகரில் கள்ளத் துப்பாக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி மத்திய பேருந்து அருகே கடந்த ஆண்டு ஜனவரி 26 -ஆம் தேதி துப்பாக்கிகளை விற்க வந்த சென்னையைச் சேர்ந்த காவலர் பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.



அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நாகராஜ், சிவா, எட்டப்பன், கலைசேகர், திவ்விய பிரபாகரன், கலைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திய இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, கள்ளத் துப்பாக்கி விற்பனை வழக்கில் புரோக்கராக இருந்த மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம் பீனா என்கிற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா முராரி என்பவர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பன்சிங் தாக்கூர் என்பவரை, சிபிசிஐடி தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

அவர் போபால் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு ஒரு வாரமாக போலீஸார் முகாமிட்டிருந்தனர். போபால் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த பன்சிங் தாக்கூரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை திருச்சி அழைத்து வருகின்றனர். 20 மாதங்களாக போலீஸாருக்கு தண்ணிகாட்டி வந்த முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளதால், இந்த வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ளது.

தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கிகளை தயாரிக்கும் கும்பல், அவற்றை வாங்கியவர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!