குஜராத் முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன. மேலும் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். எல்லையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி என்னுடன் தொலைபேசியில் உரையாடி, எல்லையில் நிலவும் பதற்றம், தற்போதைய சூழ்நிலை, மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். பனஸ்கந்தா, படான், கட்ச் மற்றும் ஜாம்நகர் ஆகிய எல்லை மாவட்டங்களில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக மாநில அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க அறிவுரை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் கடற்படை தாக்குதலை தீவிரப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி போர்க்கப்பல்கள் அரபிக்கடல் பகுதியை நோக்கி அனுப்பப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் தற்போது அரபிக்கடல் பகுதியில் இந்தியாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இந்த 26 போர்க்கப்பல்களும் பாகிஸ்தானை நோக்கி ஏவுகணைகளை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!