ரஷியாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 112வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதேவேளை, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டிற்கு வழங்கி வந்த ராணுவ உதவி, உளவு தகவல்களை அமெரிக்கா நிறுத்தியது.
மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ரஷியா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்ததையடுத்து அந்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட ராணுவ உதவி, உளவு தகவல்களை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்ப்புக்கொண்டுள்ள நிலையில் ரஷியாவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. அதேவேளை, தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. போரை தற்காலிகமாக நிறுத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்துவரும் உக்ரைன் – ரஷியா போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.