12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை: மோடி அரசு திட்டம்

சீனாவின் ஹூபே மாகாணம் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சப்ளையில் முன்னணியில் உள்ளது. இந்த மாகாணத்திலிருந்துதான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இந்த மாகாணத்தில் கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு இருந்து மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்வது முடக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து மூலப்பொருட்கள் சப்ளையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் மருந்து மூலப்பொருட்கள் சப்ளை பாதிப்பால், இந்தியாவில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மருந்துகள் கிடைப்பு குறித்து ஆராயவும் 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை அரசு அமைத்தது. இந்த குழு குளோராபெனிகால், நியோமைசின், விட்டமின் பி1,பி2 மற்றும் பி6 உள்பட 12 அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் விதிகளை செயல்படுத்த மாநில அரசுகளை வலியுறுத்துமாறும், பதுக்கல்காரர்கள் மற்றும் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அந்த நிபுணர்கள் குழு ஆலோசனை கூறியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று 12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விரைவில் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!