ஜார்க்கண்ட் முதலமைச்சராக ‘ஹேமந்த் சோரன்’ பதவியேற்பு..!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார் .

ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணி அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்கள் பெற்றன.

அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 21 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றன. இதைத்தவிர ஜார்கண்ட் ஜனநாயக புரட்சிகர முன்னணி ஒரு தொகுதியை கைப்பற்றியது. பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்திய கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!