ஜூனியர் இளையராஜா கார்த்திக் ராஜா

 ஜூனியர் இளையராஜா கார்த்திக் ராஜா

ஜூனியர் இளையராஜா கார்த்திக் ராஜா பர்த் டே டுடே!💐
எப்பேர்பட்ட பிரபலங்களில் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்களின் மனதில் இடம் என்பது எழுதப்படாத விதி.
ஆனால் திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும் இன்று அவருக்கு 51வது பிறந்தநாளாகும்.
கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.நாம் தினசரி கேட்டும் பல பாடல்களுக்கு இவர் தான் இசையமைத்தார் என ஒருவரை நினைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு கட்டத்தில் வேறு ஒருவர் தான் அந்த பாட்டுக்கு சொந்தக்காரர் என்னும் போது அவரின் பாடல்களை தேடிச் செல்வோம். அப்படி கார்த்திக் ராஜாவின் பாடல்களை எடுத்துக் கொண்டால் தெளிந்த நீரோடைப் போல பாடல்களை கொடுத்தவரிவர்.
1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளியான பல படங்களில் பின்னணி இசையை கார்த்திக் ராஜா தான் மேற்கொண்டிருந்தார். இதில் சில படங்களில் பாடல்களை கம்போஸ் செய்தும் உள்ளார். ஆனால் நாம் அந்த படமே இளையராஜாவின் இசையில் தான் உருவானது என நினைப்போம். உழைப்பாளி,அமைதிப்படை, ராசாமகன்,பொன்னுமணி, தர்மசீலன், சர்க்கரைதேவன் என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பின்னணி இசையமைத்தார். தொடர்ந்து ரஜினியின் பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில்’ பாடலுக்கு மெட்டமைத்தவர் கார்த்திக் ராஜா தான் என்பது பலரும் அறியாத உண்மை. (சினிமா பிரஸ் கிளப்)
1996-ல் ராஜ்கிரண் – வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தின் மூலம் முதன்மை இசையமைப்பாளராக அறிமுகமானார் கார்த்திக் ராஜா. அந்தப் படத்தில் தங்கை பவதாரிணியைப் பாட வைத்து அவர் இசையமைத்த ‘சந்தனம் தேச்சாச்சு என் மாமா சங்கதி என்னாச்சு’ என்ற பாடல் ரசிகர்களை ஈர்த்தது. அடுத்ததாக அப்போதைய பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான விஜயகாந்தின் ‘அலெஸாண்டர்’ படத்துக்கு இசையமைத்தார். இந்தியில் ஜாக்கி ஷெராஃப் நடித்த ‘கிரஹண்’ படத்துக்கு இசையமைத்துச் சிறந்த புதுமுக இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருதைப் பெற்றார்.
1996 ஆம் ஆண்டு தான் முழுநேர இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா பணியை தொடங்குகிறார். அந்த ஆண்டில் எனக்கொரு மகன் பிறப்பான், மாணிக்கம், அலெக்சாண்டர் என வரிசையாக 3 படங்கள் ரிலீசாகி பாடல்கள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. ஆனாலும் கார்த்திக் ராஜாவுக்கு தனி அடையாளம் கொடுத்தது விக்ரம், அஜித் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் பாடல்கள் தான். (சினிமா பிரஸ் கிளப்)
அதன்பின்னர் கார்த்திக் ராஜா காட்டில் அடைமழை தான். நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, வாஞ்சிநாதன், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், த்ரீ ரோசஸ், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, ரெட்டைச்சுழி, படை வீரன் என ஏகப்பட்ட படங்களுக்கு இசை கார்த்திக் ராஜா தான். அதேசமயம் விஜய்யின் புதிய கீதை, சுந்தர் சி இயக்கிய அரண்மனை, சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ஆகிய படங்களுக்கு பின்னணி இசையும் அமைத்துள்ளார். அதேபோல் கமலை வைத்து முத்தே முத்தம்மா (உல்லாசம்), காசு மேல காசு வந்து (காதலா காதலா) பாடலை பதிவு செய்திருப்பார்.
மேலும் கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என பழமொழிகளிலும் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
பாடல்கள் மட்டுமல்லாமல் தந்தையைப் போலவே பின்னணி இசையிலும் ஜொலித்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவே ‘இசை’ என்று தன் பெயரைத் தாங்கிவரும் படங்களுக்கு இவரைப் பின்னணி இசையமைக்க அனுமதித்திருக்கிறார் என்பதிலிருந்து பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவின் அபாரத் திறமையைப் புரிந்துகொள்ளலாம்.பல வெற்றிப் பாடல்களையும் சிறந்த பின்னணி இசையையும் கொடுத்திருந்தாலும் 50க்கும் குறைவான படங்களுக்கே இசையமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார் கார்த்திக் ராஜா. தனித்து இயங்குவதை விட தந்தைக்கு, தந்தையின் பிரம்மாண்ட சாதனைகளுக்குத் துணையாக இருப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார் என்பதே இதற்குக் காரணம். இப்போது இளையராஜா இசையமைக்கும் படங்களுக்கு இசைக் கருவிகளை ஒழுங்குபடுத்துபவராகவும் (Arranger) உலகின் பல பகுதிகளில் நடக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவராகவும் தொடர்ந்து செயல்படுகிறார்.
மேலும் மேலும் கார்த்திக் ராஜா நிறையப் படங்களுக்கு இசையமைத்து திரையிசை ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வேண்டும். இசைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...