பிஎஸ்பிபி பிரச்னையை சாதி பிரச்னையாக்க முயற்சி: கமல்ஹாசன்

”பிஎஸ்பிபி பள்ளி பிரச்னையை சாதி பிரச்சனையாக திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

என்று கூறியிருக்கிறார்.

2 thoughts on “பிஎஸ்பிபி பிரச்னையை சாதி பிரச்னையாக்க முயற்சி: கமல்ஹாசன்

  1. தவறில் இருந்து தப்பி விட அந்த சாதியின் முகமூடிதான் பயன்படுத்தப்படுகிறது.,

    தவறிழைத்த ””ஆசிறியன்”” மீது மட்டுமல்ல, பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை இருக்க வேண்டும் அதே போல அதே பள்ளியிலேயே இன்னும் சில ””ஆசிறியன்கள்”” மீதும் முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். , சிக்கிய ஒருவரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டு மற்ற அனைவரையும் தப்பிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியை முறியடிக்க வேண்டும்

  2. மதுவந்திதான் குற்றவாளியையும் தன் குடும்ப பள்ளியையும் காப்பாற்ற சாதியை கொண்டு வருகிறார் என்பதை யாராவது உறங்கிக் கொண்டிருக்கும் கமல் அவர்களுக்கு உணர்த்தலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!