ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க மாட்டை விற்ற தந்தை!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜுவாலாமுகியில் பசு மாட்டை குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க தந்தை ஒருவர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தை நடத்த ஒரே வாழ்வாதாரமான மாட்டை விற்றுள்ளதால் பிழைப்புக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.

ஜுவாலாமுகியில் உள்ள கும்மர் கிராமத்தில் வசிக்கும் குல்தீப் குமார் என்பவர் குழந்தைகளின் படிப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் இரண்டு குழந்தைகளில் ஒருவர் இரண்டாம் வகுப்பும், மற்றொருவர் நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர். லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், குல்தீப் குமாரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஸ்மார்ட்போன் வாங்க 6 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. அவர் வங்கி முதல் தெரிந்தவர்கள் வரை கடனுக்காக அலைந்துள்ளார். ஆனால் ஏழ்மை காரணமாக அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாவிட்டால் படிப்பை தொடர முடியாது என ஆசிரியர்கள் கூறியதை அடுத்து கையில் 500 ரூபாய் கூட இல்லாத குல்தீப் 6000 ரூபாய் பணத்துக்காக அலைந்து திரிந்துள்ளார். கடைசியாக வேறு வழியில்லாமல் தனது வாழ்வாதாரமான மாட்டை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தில் ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார். குடிசை வீட்டில் வசிக்கும் அவர் வாழ்வாதாரத்தை இழந்ததோடு, வறுமையிலும் சிக்கித் தவித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புகள் கிராமங்களில் அடுத்த வேலை உணவுக்கே கஷ்டப்படும் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு தான் நடத்தப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!