புதுடெல்லி: ‘‘மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து கட்சிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 16-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நாரி சக்தி வந்தன் அதினியம் (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) குறித்து வரலாற்று சிறப்புமிக்க விவாதம் நடைபெற உள்ளது. பெண்கள் முன்னேறினால் ஒரு சமுதாயம் முன்னேறும். இன்றைய காலத்தில் நமது பெண்கள் ராணுவம் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். எனவே இந்திய அரசியலில் அவர்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த சட்டத்தை உடனடியாக அமல் செய்ய வேண்டியது அவசியம். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு சார்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன. இவற்றின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதன்மூலம் இந்திய ஜனநாயகம் வலுப்படும்.
எனவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட அமலாக்கத்துக்கு அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. அந்த லட்சிய கனவை, நனவாக்கும் நேரம் வந்துவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சியின்போது முதல்முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்பட்டு தோல்வி அடைந்தது. அதன்பின்னர் பல முறை இந்த மசோதா கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்தது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது. இந்த கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இதன்படி மக்களவையின் 543 இடங்கள், 816 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதில் பெண்களுக்கு 273 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இதை உறுதி செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற ஏப்ரல் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
