18-ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்..!

வருகிற 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (PSLV-C61) மூலம் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் RISAT-1B இன் பெரிய ஏவுதலுக்காக இந்தியா தயாராகி வருகிறது.

இதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது.

இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பூமி கண்காணிப்பு பணியில் இந்த செயற்கைக்கோளும் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் நாட்டின் பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். அத்துடன், அனைத்து வானிலை தரவுகளை விண்வெளியில் இருந்து உடனுக்குடன் அனுப்பும் திறன்களை கொண்டது.

பொதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை துறை சார்ந்த மத்திய மந்திரி, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள், செயற்கைக்கோள் தொடர்புடையவர்களே பார்ப்பது வழக்கம். ஆனால், இந்த பூமி இமேஜிங் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்கள் குழுவினர் பார்வையிடுகின்றனர்.

இஸ்ரோவின் போர் குதிரை ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-09 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதுடன், அதுதொடர்பான கருத்துகளையும் தெரிந்து கொள்ள உள்ளனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!