நடிகர் தர்ஷன் மீது ஐகோர்ட்டு நீதிபதி மகன் போலீசில் புகாரளித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அவருடன் பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்ற லாஸ்லியா நடித்திருந்தார்.
இதற்கிடையில், நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் ஐகோர்ட்டு நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்தநிலையில், இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் புகார் அளித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு புகார் குறித்தும் விசாரணை மேற்கொண்ட காவல்துறை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தற்போது ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.