நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந்தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனை தொடர்ந்து, பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.
இதன்பின்னர், பிப்ரவரி 13-ந்தேதி வரை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
பின்னர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்த இரு அவைகளும், மார்ச் 10-ந்தேதி (இன்று) வரை ஒத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, 24 நாட்கள் இடைவெளிக்கு பின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.