தள்ளிவைக்கப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு – III
![தள்ளிவைக்கப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு – III](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2020/06/Edappadi-and-Sengottaiyan.jpg?resize=850%2C473&ssl=1)
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.அதே வேளையில்,10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின் தேர்வை நடத்தலாம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜூலை 2ம் வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். தற்போதைய கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களை கவனித்த போதில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 3ம் முறையாக தள்ளிவைக்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகி உள்ளது.