சென்னை: கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்க இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக, அதன் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் மொழிப் பள்ளி, பள்ளி குழந்தைகளுக்கான ஜப்பான் மொழி பயிற்சியைத் தொடங்க உள்ளது.
மொத்தம் 40 மணி நேரம் கொண்ட இந்த பயிற்சியில் 8 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் சேரலாம். இந்த பயிற்சியானது, ஜப்பானிய மொழி பேச்சுப் பயிற்சி, ஜப்பானிய குழந்தைகளிடமிருந்து பாடங்களை அறிந்து கொள்வது, ஜப்பானிய மொழி எழுதுவது, பாடல்கள் படிப்பது, ஓரிகாமி, ஜப்பானிய விளையாட்டுகள் போன்றவை இடம் பெறும்.
இதற்கான நேரடி வகுப்புகள் தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் அமைந்துள்ள இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும்.
வகுப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்குகின்றன. பயிற்சியின் நிறைவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் இணையவழி பயிற்சி திட்டம் மேலும், இணைவழியில் ஜப்பானிய மொழி வகுப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேருவோருக்கு ஜப்பானிய மொழி மட்டுமின்றி ஜப்பானிய கலை, கலாச்சாரம், வணிக நடைமுறைகள் ஆகியவையும் கற்றுத் தரப்படும். இந்த வகுப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.
இப்பயிற்சியானது, டிசம்பர் மாதம் ஜப்பான் ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட உள்ள ‘ஜெஎல்பிடி என்-5 லெவல்’ தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த இணையவழி பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 98842-00505, 73055-99874 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.ijcci.com என்ற இணையதளத்திலும் விவரங்களை அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
