உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெறவில்லை.
கனடாவை தலைமையிடமாக கொண்ட ‘ரெசோனன்ஸ் கன்சல்டன்சி’ என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் தலைசிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களை மதிப்பீடு செய்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.
நகரங்களின் செழிப்பு, நேசிக்கத் தகுதியான இடம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட சில மதிப்பீடுகளை முதன்மையாக கொண்டு தேர்வு செய்கிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்த பட்டியல் வெளியாகி வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் முதல் இடத்தில் லண்டன், 2-வது இடத்தில் நியூயார்க், 3-வது இடத்தில் பாரிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து பெங்களூரு 29-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும், டெல்லி 54-வது இடத்திலும், ஐதராபாத் 82-வது இடத்திலும் உள்ளது. பெங்களூரு தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, பெருநிறுவன தளங்கள் விரிவுபடுத்தப்படுவது போன்றவற்றுக்காக அந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
மும்பையை பொறுத்தவரை நிதி மையமாக செயல்படுவது, வேலைவாய்ப்பு, கலாசார செயல்பாடு, புதுமைகளின் மையமாக திகழுவதற்காகவும், டெல்லி நிர்வாகம், உள்கட்டமைப்பு, இணைப்பு ஆகியவற்றில் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டியதற்காகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்காகவும் இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் சென்னை நகரம் இடம்பெறவில்லை. இதுவரை வெளியான பட்டியலிலும் சென்னை இடம்பெற்றதாக புள்ளி விவரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
