“உலகளாவிய வலை தினம்” (World Wide Web Day) அல்லது “இன்டர்நேட் தினம்” (Internaut Day) என்று அழைக்கப்படுகிறது, இது 1991 இல் டிம் பெர்னர்ஸ்-லீயால் முதல் வலைப்பக்கத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதைக் குறிக்கிறது. இது இணையத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை நினைவு கூறும் ஒரு நாள் ஆகும்.
அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் அடிமை முறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இத்தகைய அடிமை வணிக முறை காலங்காலமாக ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடந்துள்ளது. இத்தகைய அடிமை வணிக முறையை எதிர்த்து கரீபியன் தீவுகளில் ஒன்றான புனித டாமினிக் பகுதியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பால் ஆகஸ்டு 23-ம் தேதி சர்வதேச அடிமை வணிக ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களின் நினைவுகளிலும் அடிமை வணிகத்தின் துன்பத்தை எடுத்துரைக்கும் நோக்குடன் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார் காலமான தினமின்று குல்தீப் நய்யாருக்குக் கிடைத்த வாய்ப்பு இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகையாளருக்குமே கிடைத்திருக்க முடியாது சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வரலாற்றில் நடந்த பல முக்கியமான விஷயங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறார்; ஏன் அவரே அனுபவித்திருக்கிறார். தேசப் பிரிவினையின்போது இவரே பாகிஸ்தானிலிருந்து அகதியாக இந்தியா வந்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது பத்திரிகையாளராக சம்பவம் நடந்த இடத்துக்கே சென்று உடனே செய்தி எழுதியிருக்கிறார். தாஷ்கெண்டில் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபோது அங்கே இருந்திருக்கிறார். இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் அதற்கு எதிராக இருந்ததால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் எடிட்டராக இருந்துள்ளார். பிரிட்டனுக்கான இந்தியாவின் தூதராக இருந்துள்ளார். இவர் நேருக்கு நேர் சந்தித்துப் பேசாத இந்தியத் தலைவர்களே இல்லை எனலாம். அப்பேர்பட்டவர் இதே ஆகஸ்ட் 23 (2018)ல் காலமானார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது. 40 நாட்கள் அது விண்வெளியில் பயணித்து, சரியாக ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது. இதை உலக சாதனை எனக்கூற காரணம், இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. ஆகவே இந்தியாவின் இந்த சாதனையை கொண்டாடும் தினமாக மத்திய அரசு ஆகஸ்ட் 23-ஐ தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது. இதன்பேரில், இன்று இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடி வருகிறது.
நெல்லை சீமை தந்த அஷ்டாவதானி ஆக்டர் டி.எஸ்.பாலையா பிறந்த நாளின்று.. குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா. தென்னகத்தின் ஆக்ஸ் போர்ட் நகரமான திருநெல்வேலி தந்த எத்தனையோ கலைஞர்களில் பாலையா குறிப்பிடத் தக்கவர். திருநெல்வேலி சுப்ரமண்யம்பிள்ளை பாலையா என்கிற பெயரைதான் பின்னாளில் திரைக்காக டி.எஸ் பாலையா என்று சுருக்கி வைத்துக் கொண்டார். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். இவர் திரைக்கு வந்த கதையே வலியும் அதன் பின்னணியில் வலியான நகைச்சுவையும் (பிளாக் கமெடி) நிறைந்த ஒன்று.ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒருநாள். சர்க்கஸ் பார்க்க போனார் பாலையா. அங்கு நடந்த வீரசாகச விளையாட்டுகள் அவரை வெகுவாக கவர்ந்துவிட்டன. சர்க்கஸில் சேர்ந்து புகழ்பெறவேண்டும் என்று விரும்பினார். நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது, ‘எனக்குத் தெரிந்தவர் சர்க்கஸ் கம்பெனியில் இருக்கிறார். உன்னை நான் சேர்த்துவிடுகிறேன்.. ஆனா அதுக்கு கொஞ்சம் செல்வாகுமே’ என்றான் ஒருவன். உடனே டி.எஸ். பாலையா ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக திருடி, அப்பாவின் சட்டைப்பையிலிருந்து ஒரு நல்ல தொகையை சேகரித்துவிட்டார். ‘மதுரைக்குப் போகவேண்டும்’ என்றான் நண்பன். போய்ச் சேர்ந்தார்கள். அவனுக்கு பலகாரம் வாங்கிக்கொடுப்பதே முக்கியமான வேலையாக இருந்தது. பாலையாவை அங்குமிங்கும் அலைக் கழித்த நண்பன், ‘நாம தேடி வந்தவரு இந்த ஊர்ல இல்ல, மானாமதுரைக்குப் போனா பாக்கலாம்’ என்றான். பேருந்தில் ஏறி உட்கார்ந்திருக்கும் போது உள்ளூர்க்காரர் ஒருவர் பையன்களைப் பார்த்து, என்ன, ஏது என்று விசாரித்திருக்கிறார். இரண்டுபேரும் வேறுவேறு காரணம் சொன்னதால், அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. பாலையாவின் டவுசர் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தபோது, நிறைய பணம் இருப்பது தெரிந்தது. ‘அப்பாவிடம் சொல்லாமல் இருக்கணும்னா எனக்கு கள்ளு குடிக்க காசு கொடு’ என்று வாங்கிக்கொண்டு பையன்களை கண்டுகொள்ளாமல் போய்விட்டார். பின்னர் மானாமதுரைக்கு வந்த அன்று இரவு ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துத் தூங்கிய பாலையா, காலையில் எழுந்தபோது நண்பணைக் காணவில்லை. பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விட்டான் என்பது தெரியவந்தது. அறியாத ஊரில் அலைந்து திரிந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தார் சாப்பாட்டுக் கடை நடத்திவந்த ஒரு பிராமணப் பெண்மணி. தான் ஒரு மலையாள பிராமணன் என்று அவரிடம் பொய் சொல்லும் சாதுர்யம் பாலையாவுக்கு இருந்ததால், சின்னச்சின்ன வேலைகளை செய்து கொடுத்து விட்டு, மூன்று வேளையும் வயிறை நிரப்ப முடிந்தது.அதே சாப்பாட்டுக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு கசாப்புக்கடை இருந்தது. அதன் உரிமையாளர் ஒரு நாடகக்கம்பெனி ஆரம்பிக்க இருக்கிறார் என்பதை மோப்பம் பிடித்த பாலையா, சாப்பாட்டுக்கடையிலிருந்து கசாப்புக்கடைக்கு மாறினார். நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்துவந்தார். ஒருமாதம் ஆகிவிட்டது. கறிக்கடை நடக்கிறதே தவிர, கலைக்குழு நடக்கப்போவதில்லை என்ற உண்மை புரிந்தது. கோபமடைந்த பாலையா, கடையைவிட்டு வெளியேவந்து, கல்லெடுத்து கடைக்காரரின்மேல் வீசினார். ஆத்திரமடைந்த கடைக்காரர், கத்தியை எடுத்துக்கொண்டு பாலையாவை விரட்ட, சாப்பாட்டுக்கடையில் ஒளிந்து தப்பித்த பாலையா, கடைக்கார பெண்மணி தந்த பத்து ரூபாயில் ஊருக்குப்போய்ச்சேர்ந்தார். அதே திருநெல்வேலியில் நாடகங்கள் நடத்திவந்த நாகலிங்கம் செட்டியாரின் பாலமோகன சங்கீத சபாவில் பாலையாவுக்கு இடம் கிடைத்தது. மாதம் ஆறு ரூபாய் சம்பளம்.அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலா தி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம். (கட்டிங் கண்ணையா) எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.பி.யூ.சின்னப்பா நடித்த ஆரிய மாலா (1941), ஜகதலப் பிரதாபன் (1944) போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர்தான் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர். குணச்சித்திர நடிப்பிலும் ரங்காராவ் போல உச்சத்தைத் தொட்டவர் பாலையா. பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையா விடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது. பாலையாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. ‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள். தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக் கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’-மாதிரியான எல்லாம் பாலையாவை என்றும் நினைவில் நிறுத்தும். ஐம்பதுகள் தொடங்கி பாலையா என்ற நடிகரின் திரைப்பட நடிப்பு ஒரு காலகட்டத்தில் தமிழர்களின் வாழ்க் கையில் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தி யிருந்தது. ஒப்பீட்டளவில் குள்ளமான தோற்ற முடைய நடிகர் பாலையா தனது உடல் மொழி, குரலின் வழியே, அவர் நடித்த பாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்தார்.அன்றைய திரைப்படங்களில் கதாநாயகனுக்குச் சமமாக வில்லன் பாத்திரம் உரு வாக்கப்பட்டிருந்தது. சில படங்களில் வில்லனுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இரு வேறு எதிரெதிர் முனைகளில் நடைபெறும் மோதல்கள் பார்வையாளருக்கு சுவாரசியம் தந்தன. ஹீரோ விற்கு எனத் தனியே ஒளி வட்டம் எதுவும் தராத நிலையில் கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனவேதான் பாலையாவிற்குத் தனது திறமையை வெளிப்படுத்தும்அருமையான வாய்ப்புகள் கிடைத்தன. வில்லன் கேரக்டரில் மிடுக்கும் மெல்லிய நகைச்சுவையும் எடுத்தெறிந்து யாரையும் துச்ச மாகப் பார்க்கும் கண்களும் என, பாலையாவின் நடிப்பினை ரசித்தவர்கள்கூட, அவர் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். கதாநாயகனின் மேன்மையான குணங்களை வெளிப்படுத்த பாலையா போன்ற வில்லன்கள் பெரிதும் பயன்பட்டனர். சில திரைப் படங்களில் கதாநாயகனைவிட வில்லனின் பாத்திரம் வலுவானதாக இருந்தது. இராஜகுமாரி (1947) படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன், வில்லன் ஆல காலன் வேடத்தில் பாலையா. சுழலும் விழிகளும் நெளியும் உடலும், அடங்கியொடுங்கிப் பேசும் பேச்சும் என பாலையாவின் வில்லத்தனத்தில் பகடியும் பின்னியிருந்தது . ஜூபிடர் பிக்ஸர்சின் மோகினி (1948) படத்தில் பாட்டு புத்தகத்தில் கதாநாய கனான எம்.ஜி.ஆரின் பெயருக்கும் மேலே பாலை யாவின் பெயர் காணப்படுவதிலிருந்து அன்றைய காலகட்டத்தில் அவருக்கு இருந்த ஸ்டார் மதிப் பினைப் புரிந்து கொள்ளலாம். அதே படத்தில் பாலையா “உண்மையும் இது இல்லையா ஒருக் காலும் மறுக்காதே” என இனிமையாகப் பாடியுள்ளார். எந்தவொரு சிறிய பாத்திரமானாலும் அதை மனதில் உள்வாங்கிக்கொண்டு, அந்தப் பாத்திர மாகவே மாறி நடிக்கும் திறன் பாலையாவிற்கு இயல்பிலே இருந்தது. எனவேதான் அவர் நடித்த படங்களில் உடன் யார் நடித்தாலும் தனது நடிப்பின் மூலம் தனது அடையாளத்தைப் பதித்து விடுவார். ‘ரீப்ளேஸ்மெண்ட்’ என்றொரு வார்த்தை உண்டு. பாலையா எனும் மகத்தான கலைஞனுக்கு ‘ரீப்ளேஸ்மெண்ட்’ இதுவரை எவரும் வரவில்லை. அதுதான் பாலையா ஸ்பெஷல்.1914ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பிறந்த டி.எஸ்.பாலையா, 1972ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி காலமாகியும் நினைவில் வாழ்கிறார்.
“ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்”. ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்: என்ன நடந்தது? 1973, ஆகஸ்ட் 23: சிறை விடுப்பில் வந்த ஜான் எரிக் ஆல்சன் என்ற குற்றவாளி, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கிரெடிட்பேங்கென் வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்தார். பணயக்கைதிகள்: அவர் வங்கியில் இருந்த நான்கு பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தார். கோரிக்கைகள்: தன் நண்பரான கிளார்க் ஆலஃப்சனை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், பணம் வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தார். பணியாற்றல்: அவரது நண்பர் வரவழைக்கப்பட்டாலும், மற்ற கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. காவல்துறையின் நடவடிக்கை: ஆறு நாட்கள் தொடர்ந்த இந்தச் சிக்கலுக்குப் பிறகு, ஆகஸ்ட் 28 அன்று, காவல்துறை கட்டிடத்தில் துளையிட்டு, கண்ணீர்ப்புகையை செலுத்தி குற்றவாளிகளைப் பிடித்தது. பணயக்கைதிகளின் விசித்திரமான எதிர்வினை: ஆச்சரியமாக, 6 நாட்கள் குற்றவாளியின் பிடியில் இருந்த பணயக்கைதிகள், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, கொள்ளையர்களுக்கு ஆதரவாகப் பேசினர். அவர்கள் தங்களை குற்றவாளிகள் பத்திரமாகப் பார்த்துக் கொண்டதாகவும், காவல்துறைதான் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், அதனால்தான் பயந்ததாகவும் தெரிவித்தனர். ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமின் பிறப்பு பணயக்கைதிகள் தங்களை அடைத்து வைத்திருந்த கொள்ளையர்கள் மீது ஏற்பட்ட இந்த விசித்திரமான பாச உணர்வை, ஸ்வீடன் குற்றவியல் மற்றும் உளவியல் நிபுணர் நில்ஸ் பெஜிராட், “ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்” என்று அழைத்தார். இன்றுவரை, பணயக்கைதிகள், கடத்தப்பட்டவர்கள் அல்லது சிறைவைக்கப்பட்டவர்களுக்கு, அவர்களை அடைத்து வைத்திருப்பவர்கள் மீது ஏற்படும் பாச உணர்வை விவரிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
நான்மறைகளையும் தமிழில் மொழிபெயர்த்த மகாபண்டிதரும்,கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான ம.ரா.ஜம்புநாதன் (M.R. Jambunathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 23). இந்தியத் திருநாட்டின் தொன்மைக்கும் பெருமைக்கும் உறுதுணையானவற்றுள் வேதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் வடமொழியில் அமைந்தவை. வேத ஆராய்ச்சியிலும் வேத மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்ட அறிஞர்கள் பற்பலராவர். அவர்களுள் , நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார் என்பது நாம் பலரும் அறிய வேண்டிய செய்தி. 1938, 1940-ம் ஆண்டுகளில் யஜுர், அதர்வண வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். 30 ஆண்டு காலம் அயராது பாடுபட்டு மொழிபெயர்த்த ரிக் வேதம் முதல் தொகுதியை, இவரது மறைவுக்குப் பிறகு பம்பாயில் 1978-ல் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா வெளியிட்டார். இரண்டாவது தொகுதி 1980-ல் வெளியிடப்பட்டது. தனது முதல் படைப்பான ‘சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை’ ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி 1918-ல் வெளியிட்டார். ‘வேதசந்திரிகை’, ‘சீன வேதம்’, ‘மாஜினியும் மனிதர் கடமைகளும்’, ‘யோக உடல்’, ‘ஸ்வாமி ஸ்ரத்தானந்தர்’, ‘திரிமூர்த்தி உண்மை’, ‘உபநிடத சிறுகதைகள் அடங்கிய கதா ரத்னம்’ உள்ளிட்ட நூல்களைப் படைத்து, வெளியிட்டார். “”அவர் மொழிபெயர்ப்புக்கு உரைநடையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் சமூக அடித்தளத்தில் உள்ளவர்களான தாழ்த்தப்பட்டோர் வேதங்களை அறிய வேண்டும் என்பதுதான். மற்றொன்றையும் நினைவு கூர்வது அவசியமாகும். அவர், மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் மூலத்தை சிதைக்காது எக்கருத்தையும் தம் விருப்பம் போல் சேர்க்காது, குறைக்காது வேதம் கூறுவதை அப்படியே தருகின்றார்” என்று வேத ஆய்வாளர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். சென்னையில் “ஜம்புநாத புஸ்தக சாலை’ என்னும் பதிப்பகம் அமைத்து அதன்வழி தமது மொழியாக்கங்களை வெளியிட்டிருக்கிறார். வேதம் அனைவருக்கும் பொதுவானது என்று கருதும் சான்றோர்கள் அதனை அனைவரும் அறியும்படி தம்மாலான பணிகளைச் சிறப்புறச் செய்துவந்த அக்காலத்தில், அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்று சேரவேண்டும் என்று கருதியவர் ஜம்புநாதன் ம.ரா.ஜம்புநாதன் 1974-ம் ஆண்டு தனது 78வது வயதில் மறைந்தார்.
ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் ஆவணத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்ட நாள் காந்தியை உலகிற்கு ஆவணப்படுத்திய ஏ.கே.செட்டியார் மகாத்மா காந்தி குறித்த முதல் வரலாற்று ஆவணப்படத்தைத் தயாரித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.கே. செட்டியார் ஆவார். அவர் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், பதிப்பாளர், மற்றும் பயண ஆர்வலர். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் பணியை அவர் 1940-களிலேயே தொடங்கினார். அரிய பதிவுகள் தேடி உலகப் பயணம் செட்டியார் இந்த ஆவணப்படத்திற்காக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். 1937-ஆம் ஆண்டில் எஸ்.எஸ். சமரியா என்ற கப்பலில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று, அங்கு காந்தியின் வாழ்க்கை தொடர்பான காட்சிகளைச் சேகரித்தார். பல்வேறு நாட்டு அரசுகளிடமிருந்தும், தனியார் சேகரிப்பாளர்களிடமிருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைப் பெறுவதற்கு அவர் மூன்று ஆண்டுகள் உழைத்தார். 12,000 அடி நீள ஆவணப்படம் இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு, 12,000 அடி நீளமுள்ள ஒரு முழு நீள ஆவணப்படத்தை தமிழில் தயாரித்தார். பின்னர், அது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அன்றைய பிரித்தானிய அரசின் அச்சத்தால், திரையரங்குகள் இந்தப் படத்தை திரையிடத் தயங்கின. சுதந்திர இந்தியாவில் வெளியீடு இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த ஆவணப்படம் 1948-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று புது டெல்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 23, 1948 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படத்தின் அசல் பிரதிகள் தற்போது இல்லை. ஹாலிவுட் மற்றும் மறுகண்டுபிடிப்பு பின்னர், செட்டியார் இந்தப் படத்தை 1953-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் “Mahatma Gandhi: Twentieth Century Prophet” என்ற தலைப்பில் ஹாலிவுட்டில் தயாரித்து வெளியிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தின் ஒரு பிரதி சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, ஜனவரி 19, 2006 அன்று சென்னையில் மீண்டும் திரையிடப்பட்டது. சிறப்பு அம்சங்கள் 55 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், 1912-ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலே தென் ஆப்பிரிக்கா சென்றதும், அங்கு காந்தியுடன் அவர் சந்தித்து உரையாடியதும், ஜவகர்லால் நேரு சர்க்கா சுற்றும் காட்சியும், உப்பு சத்தியாகிரகத்தை முடித்துக்கொண்டு காந்தி தண்டிக் கடற்கரையில் நீராடும் காட்சியும் எனப் பல அரிய தருணங்கள் இடம்பெற்றுள்ளன. ஏ.கே. செட்டியாரின் இந்த முயற்சி, காந்தியின் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒரு முன்னோடிப் பணியாகப் போற்றப்படுகிறது.
