நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். அவரது தலைமையில் விளையாடிய சென்னை அணி நடப்பு சீசனில் 5 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக அந்த மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அறிவித்துள்ளார்.
நாளை நடைபெற உள்ள கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலிருந்து தோனி கேப்டனாக செயல்பட உள்ளார்.
இது சென்னை அணிக்கு நிச்சயம் வலுவானதாக அமையும். ஏனெனில் கடந்த காலங்களில் சென்னை அணி தோனி தலைமையிலேயே 5 கோப்பைகளையும் வென்றுள்ளது. மேலும் இவரது தலைமையில் வெற்றிகரமாகவும் செயல்பட்டுள்ளது. கடந்த சீசனில் சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார்.