‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்பட்டது.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜையை சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான உடனேயே நயன்தாராவுக்கும், உதவி இயக்குனர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
அதேசமயம், நயன்தாராவை படத்திலிருந்து தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், குஷ்பு இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
‘மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. தயவு செய்து யாரும் அதை நம்ப வேண்டாம். படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுந்தர் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
நயன்தாரா திரைத்துறையில் தனது தகுதியை நிரூபித்த ஒரு நல்ல நடிகை. அவர் மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த வதந்திகள் “திருஷ்டி எடுத்த மாதிரி”. நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும். உங்கள் ஆசீர்வாதத்தையும் அன்பையும் மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார்.