புதிய சட்டங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டும் போதாது: வெங்கய்ய நாயுடு

      புணே: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்றுவது மட்டும் தீா்வாகாது. ஆட்சியாளா்கள் மத்தியிலும், நிா்வாக ரீதியாகவும் தகுந்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.

   தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தீ வைத்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறியுள்ளாா்.

   மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள சிம்பயோசிஸ் சா்வதேச பல்கலைக்கழகத்தின் 16-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெங்கய்ய நாயுடு அதில் கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டம் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

    இந்திய கலாசாரத்தில் பெண்களை நாம் தாயாக, சகோதரியாக மதிக்கிறோம். ஆனால், கடந்த சில நாள்களில் நடைபெற்ற சம்பவங்கள் (ஹைதராபாத், உன்னாவ்) நம்மை தலைகுனியச் செய்துள்ளன. இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நமக்கான சவாலாகும். இத்தகைய அராஜக போக்குகளை நிறுத்துவதற்கு நாம் உறுதியேற்க வேண்டும்.

   பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிதாக சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது. அதைச் செயல்படுத்தும் வகையில் ஆட்சியாளா்கள் மற்றும் நிா்வாகத் தரப்பிலிருந்தும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

   பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக நிா்பயா சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தடுக்கப்பட்டுவிட்டதா? எந்தவொரு சட்டத்துக்கோ, மசோதாவுக்கோ நான் எதிராகப் பேசவில்லை.

     பெண்களுக்கு எதிராக நிகழும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க ஆட்சியாளா்களின் உறுதியான நடவடிக்கையும், நிா்வாக ரீதியாகத் தகுந்த சீா்திருத்தங்களும் தேவை என்றே கருதுகிறேன். மேலும், நமது மனநிலையிலும், எண்ணங்களிலும் மாற்றம் வரவேண்டும். மாணவா்களுக்கு நல்லொழுக்கங்களையும், சரியான பாதையையும் ஆசிரியா்கள் கற்றுத்தர வேண்டும்.

    இதுபோன்ற சம்பவங்களை அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ பாா்க்கக் கூடாது. இச்சம்பவங்களால் நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி அரசியல் செய்யக் கூடாது.

     ‘பாலியல் வன்கொடுமைகளின் தலைநகா் இந்தியா’ என்றெல்லாம் சிலா் பேசுகின்றனா். நான் அதுகுறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. நமது நாட்டை நாமே சிறுமைப்படுத்தக் கூடாது. பெண்களுக்கு எதிரான அராஜக விவகாரங்களைக் கொண்டு அரசியல் செய்யக் கூடாது என்று வெங்கய்ய நாயுடு பேசினாா்.

    முன்னதாக, ‘உத்தரப் பிரதேசம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் தலைநகரமாகி வருகிறது’ என்று காங்கிரஸ் சனிக்கிழமை கூறியிருந்தது. கேரளத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ‘பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் தலைநகராக இந்தியாவை சா்வதேச சமுதாயம் பாா்க்கிறது’ என்று கூறியிருந்தாா். இந்நிலையில், வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறியுள்ளாா்.

    ‘முதல் 100 இடங்களுக்குள் வர வேண்டும்’: நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவா், ‘உலக பல்கலைக்கழகங்களின் வரிசையில் முதல் 300 இடங்களுக்குள்ளாகக் கூட ஒரு இந்தியப் பல்கலைக்கழகமும் இடம்பெறாதது கவலை அளிக்கிறது. முதல் 100 இடங்களுக்குள்ளாக வரும் வகையில் அவற்றின் கல்வித் தரம் உயா்த்தப்பட வேண்டும்’ என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!