காலத்தால் அழியாத கவியரசர்

 காலத்தால் அழியாத கவியரசர்

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பலப் பல. சண்ட மாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர் திரையிசைப்பாடல்களுக்கு  மக்களிடத்தில் ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்த காலத்தால் அழிக்கமுடியாத கவிஞன் கவியரசர் கண்ணதாசன்.

கண்ணதாசனின் இயற்பெயர்  முத்தையா.  தமிழ்நாடு, சிறுகூடல்பட்டி யில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தவர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண் டிருந்த கவியரசர், பின் அதே காந்தி சிலையின் முன்னால் சினிமா தயாரிப்பாளராகப் படம் எடுக்கும் அளவுக்கு முன்னேறினார்.

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா  என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடை பெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடா சலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாள்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் பிறந்தார்.

தமிழில் கவிதையைப் படைப்பதற்காகவே படைக்கப்பட்டவர் கண்ண தாசன். கவிதை ஊற்று கண்ணதாசன். நாணிலிருந்து புறப்படும் அம்பைப் போல, இசையின் வேகத்துக்குச் சொற்களைப் பாய்ச்சும் அர்ச்சுனக் கவிஞன். கவியரசராக இருந்ததால் அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளாத குழந்தையாக தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவர் கண்ணதாசன். வளரும் பருவத்திலேயே முதலில் எழுத்தைக் காதலித்ததால் அதை இறுதி மூச்சு வரை விடாமல் பிடித்திருந்தார். எழுத்தைத் தேடித் தேடிப் படித்து தன்னைக் கவிதையோடும் கதைகளோடும் தமிழக வரலாறோடும் பிணைத்துக் கொண்டவர் கவியரசர் கண்ணதாசன். எழுதுவதில் மட்டுமல்ல, சொற்பொழிவாற்று வதிலும் மடைதிறந்த வெள்ளமாகத் தமிழ் அருவி அவர் உள்ளத்திலிருந்து கொட்டும். தனிமனித உழைப்பில் சளைக்காதவர். தம் வாழ்நாளில் பெரும்பகுதியை திரைப்படத்துக்குப் பாடல் எழுதுவதில் கழித் தார். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் அவரை அணைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் நேர்மை அதற்குத் தேவையில்லை. நாத்திகம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஆத்தி கத்தை அணைத்துக்கொண்டார். அதனாலேயே அவர் பொதுவாழ்விலிருந்து திரும்ப வேண்டியதாயிற்று. ஒரே நேரத்தில் அரசியல் களம் கண்டவர்கள் கலைஞர் கருணாநிதியும் கண்ணதாசனும். ஆனால் கருணாநிதி அரசியலில் கோலோச்சிய அளவுக்கு இவரால் நிற்க முடியவில்லை. காரணம் சாணக் கியத் தந்திரம் இவருக்குத் தெரியாது. அந்த அனுபவங்களை வனவாசம் என்ற தலைப்பில் நூலாக எழுதி அம்பலப்படுத்தினார். அந்த நூல் இப்போது திருத்தப்பட்டுவிட்டது.

வனவாசம் நூலில் கலைஞரை நேரடியாகப் பல இடங்களிலும், ‘கலை ரசிகர்’ என மறைமுகமாகப் பல இடங்களிலும் தாக்கி எழுதியுள்ளார். கட்சிமாறும் போதெல்லாம் யாரையெல்லாம் புகழ்ந்து தள்ளினாரோ அவர்களையெல்லாம் தரக்குறைவாகப் பழிதூற்றவும் செய்தார். இருப்பினும் அரசியல் தலைவர்கள் அவரைப் புறந்தள்ளாமல் அவருக்குப் பதவி, சிலை, மண்டபம், பிறந்தநாள் அரசு விழா எனப் போற்றி மதிப்பளித்தனர். அண்ணாவின் திராவிடக் கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9ல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

1981, ஜூலை 24ல் உடல்நலக் குறைவு காரணமாக  சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22ல் எரியூட்டப் பட்டது.

அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்), இயேசு காவியம், மாங்கனி ஆகிய படைப்புகளும், பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்) கவிதை நூல்களும், கண்ணதாசன் கவிதைகள் – 6 பாகங்களில்  பாடிக்கொடுத்த மங்களங்கள், கவிதாஞ்சலி, தாய்ப்பாவை, ஸ்ரீகிருஷ்ண கவசம், சுருதி சேராத ராகங்கள், முற்றுப்பெறாத காவியங்கள், பஜகோவிந்தம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம். மற்றும் 21 புதினங்கள், வாழ்க்கைச் சரிதங்கள் : எனது வசந்த காலங்கள், வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை), எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்), மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள் : கடைசிப்பக்கம், போய் வருகிறேன், அந்தி, சந்தி, அர்த்த ஜாமம், நான் பார்த்த அரசியல், எண்ணங்கள், வாழ்க்கை என்னும் சோலையிலே, குடும்பசுகம், ஞானாம்பிகா, ராகமாலிகா, இலக்கியத்தில் காதல், தோட்டத்து மலர்கள், இலக்கிய யுத்தங்கள். நாடகங்கள் : அனார்கலி. சிவகங்கைச்சீமை. ராஜ தண்டனை.

இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். சேரமான் காதலி படைப்பிற்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

இன்று கவியரசரின் நினைவு நாள் (அக்டோபர் 17 – 1981)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...