கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி நடை பாலம் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது. இந்த கண்ணாடி நடை பாலத்தில் நடந்த சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும். இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இந்த பாலத்தை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு, வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த பாலத்தில் நின்றவாறு செல்போன்கள் மூலம் புகைப்படங்கள் எடுத்தும், செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்கிறார்கள். வழக்கமாக கன்னியாகுமரியில் சீசன் அல்லாத காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் அல்லாத காலமான ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்தநிலையில் இந்த பாலத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த 5 நாட்களும் சுற்றுலாப் பயணிகள் பாலத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை ரைட்ஸ் நிறுவனம் என்ற மத்திய பொதுத்துறை நிறுவனம், தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளன. எனவே இந்த 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.