கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்..!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். அந்தவகையில் ஞாயிறு விடுமுறையான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

அவ்வாறு வந்தவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் திரண்டனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமாகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதைதொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். கண்ணாடி இழை கூண்டு பாலத்தில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!